சாகும் வயதாடா தம்பி உனக்கு.. ப்ளூவேல் கொடூரனுக்கு இரையான மதுரை விக்னேஷ்!
புளூவேல் வலைதள விளையாட்டுக்கு மதுரையில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை: மதுரையில் புளூவேல் ஆன்லைன் விளையாடிய மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செல்போன்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புளூவேல் விளையாட்டிற்கு இரையான மாணவர் பெயர் விக்னேஷ். இவர் மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த வனிதா, ஜெயமணி என்பவரின் மகனாவார். இவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
புளூவேல் விளையாட்டை தன் செல்போனில் டவுன்லோடு செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார் விக்னேஷ்.
விளையாட்டுக்கு அடிமையான விக்னேஷ்
விளையாட்டு மோகத்தில் இருந்த விக்னேஷ் கடந்த மூன்று தினங்களாக வீட்டிலும், உறவினர்களுடனும் எதுவும் பேசாமல் ஒருவிதமான குழப்பமான மனநிலையோடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
தூக்கு போட்டு தற்கொலை
புதன்கிழமையன்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளுவேல் விளையாட்டை விளையாடியுள்ளார். ஆட்டத்தின் முடிவில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
நீலத்திமிங்கலத்தின் படம்
மேலும் விக்னேஷ் தனது இடது கையில் பிளேடினால் கீறி நீலத் திமிங்கலத்தின் படத்தை வரைந்துள்ளார். புளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்தும் எழுதி வைத்துள்ளார். இது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கலங்கும் பெற்றோர்
மாணவன் தற்கொலை குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றாக படிக்க கூடிய மாணவன் வலைதளத்தின் மூலமாக விஷம விளையாட்டினால் உயிரிழந்ததைக் கண்டு விக்னேஷின் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர்.