நான்தான் கார்த்தி சிதம்பரம்..!
சென்னை: முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம், வலுவான போட்டியை சிவகங்கையில் சந்திக்கிறார்.
இது நாள் வரை தனது தந்தை ப.சிதம்பரத்திற்காக சிவகங்கையில் பணியாற்றிய கார்த்தி சிதம்பரம் தற்போது தனது தந்தையின் துணையுடன் தனக்கு வாக்களிக்கக் கோரி சிவகங்கைச் சீமையை சுற்றி வரப் போகிறார்.
கார்த்தி சிதம்பரம் இது வரை அரசியலில் இருந்து வந்தாலும் கூட இதுவரை உருப்படியான பதவி எதையும் வகித்ததில்லை. எல்லோரும் இவரை ப.சிதம்பரம் மகன், ப.சிதம்பரம் மகன் என்றுதான் கூறி வந்தார்கள். இந்த நிலையில் முதல் முறையாக எம்.பியாகும் வாய்ப்பை எதிர்நோக்கி சிவகங்கைக்கு வருகிறார் கார்த்தி சிதம்பரம்.

மெத்தப் படித்தவர்
அப்பாவைப் போலவே கார்த்தியும் மெத்தப் படித்தவர். சென்னை டான் பாஸ்கோவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் பின்னர் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார்.

கருத்து கந்தசாமி
இவரும், கனிமொழியும் முன்பு இணைந்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கும் சேவையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பிரிந்து விட்டனர்.

விளையாட்டுப் பிள்ளை
விளையாட்டில் ஆர்வம் மிக்கவர் கார்த்தி. அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்தார். இந்திய பவுலிங் சங்கத்தின் தலைவராக இருந்தார். இப்படி நிறைய விளையாட்டு அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீநிதியின் கணவர்
கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி. டாக்டரான இவர் சிறந்த பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.

தந்தையுடன் அரசியல்
தனது தந்தை வழியில் அரசியலுக்கு வந்தவர் கார்த்தி. காங்கிரஸ் கட்சியின் வெறும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வரும் கார்த்தி, தமிழகத்தின் மிகப் பெரிய கோஷ்டிகளில் ஒன்றின் தலைவராக இருப்பது மிகப் பெரிய சாதனைதான்.

வாசனுக்கு கடும் பைட் கொடுப்பவர்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய கோஷ்டித் தலைவர் ஜி.கே.வாசன்தான். அடுத்த தலைவர் கார்த்தி சிதம்பரம்தான். வாசன் கோஷ்டிக்கு எப்போதும் கடுமையான பைட் கொடுப்பவர்கள் இவர்கள்தான்.

முதல் முறையாக
இதுவரை கட்சித் தேர்தலில் கூட போட்டியிட்டிராத கார்த்தி முதல் முறையாக சிவகங்கை தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரது அப்பா சிதம்பரம் போட்டியிட தயங்கி தனது மகனை இங்கு இறக்கி விட்டுள்ளார்.

அப்பாவின் ராஜ எதிரி
சிவகங்கையில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். அவர் ப.சிதம்பரத்தின் கடும் எதிரி. எனவே ராஜாவை வென்றால் அது ப.சிதம்பரத்திற்கும் பெருமையாக இருக்கும் என்பதால் கார்த்தியின் பிரசாரத்தில் அனல் பறக்கும் என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டுப் பிள்ளை
விரைவிலேயே உங்கள் வீட்டுப் பிள்ளையான நம்முடைய கார்த்தி சிதம்பரத்திற்கு உங்களது பொன்னான வாக்குகளைப் போடுங்கள்.. மறவாதீர் நமது சின்னம் கை சின்னம்.. உங்கள் சின்னம் கை சின்னம்.. என்ற கோஷத்துடன் காங்கிரஸார் படை படையாக சிவகங்கையை சுற்றி வருவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications