சிவகாசி பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் விரைவு
சிவகாசி: தீபாவளிக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
சிவகாசி அருகே பேரபட்டியிலுள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் விதவிதமான பட்டாசுகளை தயாரிக்கும் பணிகள் சிவகாசியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பேரபட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக அருகில் இருந்த கிடக்கில் வைக்கப்பட்டிருந்தன.
அந்த கிடங்கில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறுகின்றன. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தீயணைப்பு துறையினர் அருகில் சென்று தீயை அணைக்க முடியாத அளவிற்கு பட்டாசுகள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன.