சென்னை: மேஜர் முகுந்த் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்
சென்னை: காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்ந் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கிழக்குத் தாம்பரம் புரபசர் காலனியைச் சேர்ந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன் (32). ராணுவ அதிகாரியான இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்தார். இவரது தந்தை வரதராஜன், தாய் கீதா. இவருக்கு சுவேதா, நித்யா என்ற சகோதரிகள் உள்ளனர்.

முகுந்த் வரதாராஜன் திருமணமானவர் இவருடைய மனைவி பெயர் இந்து ரிபெக்கா. இவர்களுக்கு அர்ஷியா (3) என்ற மகள் இருக்கிறார்.
மேஜர் முகுந்த் உடல் ஞாயிறு இரவு 11.50 மணிக்கு ஏர்இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதனை ராணுவ அதிகாரிகள் பெற்றுக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் நந்தம்பாக்கம் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முகுந்த் வீட்டில் அஞ்சலி
இன்று காலை 8.30 மணிக்கு முகுந்த் உடல் கிழக்கு தாம்பரம் புரபசர் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உடலைக்கண்டு மனைவியும், பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அஞ்சலி
அமைச்சர் சின்னையா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கர், முன்னாள் மத்திய மந்திரிகள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் மணி, நெடுஞ்செழியன், சிவராமன், பா.ஜனதா தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட ஏராளமானோர் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பெசன்ட் நகர் மின்மயானத்தில்
இன்று மதியம் மேஜர் முகுந்த் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமன்ட் சார்பில் 200 ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்
ராணுவ உயர் அதிகாரிகளும் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் 42 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் மேஜர் முகந்த் உடல் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications