‘கருணைக்கொலை மனிதநேயமே’... மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற கி.வீரமணி கோரிக்கை
சென்னை: கடும் துன்பத்திலிருந்து உடல் அளவிலும் மன அளவிலும் விடுதலை கிடைப்பது கூட மனிதநேயமான செயல் தான். எனவே, இது தொடர்பாக மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முதல்வரின் தனிப்பிரிவில் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மன வளர்ச்சி குன்றிய மகளைக் கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஊடகங்களில் வெளியான இச்செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இந்நிலையில், கருணைக்கொலை மனிதநேயமே என்பதை வலியுறுத்தி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேவை....
தீராத நோய்களுக்கு ஆளாகி இனி பிழைக்க வழியில்லை என்ற நிலையில் நொடி தோறும் துயரப்படுபவர்களுக்கு கருணைக்கொலை தேவையானது. கருணை கொலை பற்றி மத்திய-மாநில அரசுகள், பொதுமக்கள் கருத்துக்களை அறிவது முக்கியம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நிம்மதியான சாவு...
பலருக்கு தாங்க முடியாத, இனி முழு நலம் பெற முடியாத அளவுக்கு, நோய் முற்றி, தாங்கொணாத வலி, வேதனை, துன்பத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதால், அதிலிருந்து விடுபட்டு, நிம்மதியான சாவை பெற்று, ஆறுதலோடு உலகிலிருந்து விடை பெற வேண்டும் என்று பல நோயாளிகள் கருதுகின்றனர், விரும்புகின்றனர்.

பழைய நம்பிக்கை...
கருணை கொலைக்கு எதிராக வாதம் செய்வோர், ஆண்டவன் கொடுத்த உயிரை மனிதன் எடுப்பதா? என்ற பழைய நம்பிக்கையை முன் வைத்தே கூறுகின்றனர்.

சட்டம்...
ஆகவே அந்த வாதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கருணை அடிப்படையில் என்பதை எவ்வளவு விரைவில் சட்டமாக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் தாராளமாக செய்ய முன்வர வேண்டும்.

மனிதநேயம் தான்...
கடும் துன்பத்திலிருந்து உடல் அளவிலும் மன அளவிலும் விடுதலை கிடைப்பது கூட மனிதநேயம் தானே' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications