ரூ.500 நோட்டு செல்லவில்லை எனில் அம்பானியா கியூவில் நிற்பார்? மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் அம்பானியோ, அதானியோ பாதிக்கப்படப் போவதில்லை. சாமானிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 9ம் தேதியில் இருந்து செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். கையில் பணம் இருந்தும் ஏழைகள் போல் செலவிட முடியாமல் தவித்து வந்தனர். அன்றாடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கூட சாதாரண மக்கள் பெரும்பாடு பட்டனர்.

இந்நிலையில், மோடியின் இந்த அறிவிப்பைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மோடியின் இந்த அறிவிப்பால் அம்பானி, அதானி, நத்தம் விஸ்வநாதன், ஓ. பன்னீர் செல்வம் போன்ற கோடிஸ்வரர்கள் பாதிக்கப்படப் போவதில்லை; அவர்கள் வங்கிக்கு சென்று கால் கடுக்க நிற்கவும் தேவையில்லை. சாமானிய மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும், "ரொக்கப்பணம் மட்டும் கருப்பு பணம் இல்லை, கருப்புப் பண முதலைகளின் எந்த வகை முதலீடுகளையும் முடக்காமல் சாமானியர்களின் சேமிப்பு சம்பளத்தை வழிப்பறி செய்வதே மோடியின் இந்த திடீர் தாக்குதல். இந்தியாவில் 90 சதவீத முதலீடுகள் பல வகைகளிலும் 2 சதவீத பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள் ஏழரை லட்சம் கோடி ரூபாயை வராக்கடனாக வைத்துள்ளனர். அவர்களது பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடி அரசால் கருப்புப் பணத்தை எப்படி மீட்க முடியும்" என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.
அம்பானி, அதானிகள் கருப்பு பணத்தை 500 மற்றும் 1000 ரூபாயாக வைத்திருப்பதில்லை என்பது உள்ளிட்ட மத்திய அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications