துரை வைகோவுக்காக தீக்குளிப்போம் என மதிமுக நிர்வாகிகள் மிரட்டல்- மல்லை சத்யா நாளை 'டிஸ்மிஸ்'?
சென்னை: மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை துரை வைகோ எம்பி திரும்பப் பெற வேண்டும்; அல்லது துரை வைகோவின் முடிவைக் கண்டித்து தீக்குளிப்போம் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வலது கரமான அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது, வைகோவின் மகன் துரை வைகோ எம்பி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். துரை வைகோவுக்கான அதீத முக்கியத்துவத்தை மல்லை சத்யா 4 ஆண்டுகளாக ஏற்கவில்லை என்பதுதான் இந்த அதிருப்தியின் பின்னணி.

மேலும் மதிமுகவில் துரை வைகோவால் ஜாதிய அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சென்னையில் அண்மையில் நடைபெற்ற மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழுவிலும் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் துரை வைகோ, பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார். இதற்கு பின்னணியில் இருப்பதும் மல்லை சத்யா என்பது துரை வைகோவின் கோபம்.
இதனால், மல்லை சத்யாவை, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய கோரி துரை வைகோவின் ஆதரவாளர்கள் பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்தார். மேலும் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் வரும் 20-ந் தேதி நடைபெறும் எனவும் வைகோ அறிவித்தார்.
இந்த நிலையில்தான் திடீரென இன்று மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ எம்பி அறிவித்தார். இது தொடர்பான நீண்ட அறிக்கையில் மல்லை சத்யாவின் பெயரை குறிப்பிடமால், ஒருவர் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார் துரை வைகோ.
துரை வைகோவின் இந்த அறிவிப்பு மதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுததி உள்ளது. துரை வைகோ தமது முடிவை திரும்பப் பெற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். துரை வைகோ தமது முடிவை திருமப்ப பெறாவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.
இதனிடையே துரை வைகோவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் செந்திலதிபன் தெரிவித்தார். மேலும் நாளை நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழுவில் சுமூக முடிவு கிடைக்கும் என்றார் செந்திலதிபன். சென்னையில் நாளை நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா நீக்கப்படும் அறிவிப்பு வெளியாகும்; இதன் பின்னர் துரை வைகோ தமது விலகல் முடிவை திரும்பப் பெறுவார் என்கின்றன மதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications