பாதியில் கிளம்பிய கார்கே.. கிருஷ்ணகிரியில் ஸ்டாலின் பேச தொடங்கியதும் நடந்த சம்பவம்.. என்னாச்சு?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஸ்டாலின் பேச்சை தொடங்கியதும் பாதியில் கிளம்பி சென்ற சம்பவம் நடந்தது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே இன்று திமுக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று இருந்தார். கூட்டத்தில் முதலில் மல்லிகார்ஜுன கார்கே கன்னட மொழியில் பேசினார். அப்போது மல்லிகார்ஜுன கார்கே, ''தமிழ்நாடு வெறும் மாநிலம் மட்டுமில்லை. இது மொத்த நாட்டுக்கும் வழிக்காட்டும் விளக்காக உள்ளது. சமத்துவம், சமூக நீதி உள்ளிட்டவற்றை எடுத்துரைத்த பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்களின் பூமி. காங்கிரஸ் - திமுக கூட்டணி இணைந்து மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்துள்ளது. இது வரலாற்று வெற்றி.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களை வஞ்சிக்க பாஜக முயற்சிக்கிறது. இந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்கவில்லை. பாஜக மதத்தின் பெயரில் மக்களை பிரிக்கிறது. அவர்களுக்கு தமிழக சட்டசபை தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். திமுக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உதவித்தொகை, மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்டவற்றை செய்துள்ளது. நடப்பது சாதாரண தேர்தல் அல்ல. சித்தாந்த ரீதியான தேர்தல். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஏப்ரல் 23ம் தேதி வாக்களிக்க வேண்டும்'' என்று பேசினார்.
அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கினார். பிரசாரத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் உள்பட பிற நிர்வாகிகளின் பெயர்களை கூறி வரவேற்றார். பிறகு நேற்றைய தினம் தமிழகத்தில் ராகுல் காந்தி செய்த பிரசாரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
இந்த வேளையில் மேடையில் பேசிய முக ஸ்டாலினுக்கு ஒரு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின், ''கார்கே அவசரமாக புறப்பட வேண்டி உள்ளது. அனுமதி கேட்டு செய்தி அனுப்பி உள்ளார். அவர் செல்வதற்கு அனுமதி கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைப்போம்'' என்றார். அதுமட்டுமின்றி பேச்சை பாதியில் நிறுத்திய ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கேவிடம் கைக்குலுக்கி வழியனுப்பி வைத்து மீண்டும் பேச்சை தொடங்கினார்.












Click it and Unblock the Notifications