”மகளிர்க்காக” பட பாணியில் பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய போதை ஆசாமிக்கு ஜெயில்!
கோவை: கோவையில் காவல் நிலையத்திற்கு போன் செய்து பெண் காவலர்களிடம் ஆபாச பேச்சு பேசிய போதை ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் குடிப் பழக்கம் உள்ளவர். இரவு நேரங்களில் போதை தலைக்கு ஏறியதும் தன்னுடைய செல்போனிலிருந்து ஏதாவது ஒரு இலவச அழைப்புக்கு தொடர்புகொண்டு அவர்களுடன் வம்பிழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக போதை ஏறியதும் அன்னூர் காவல் நிலைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அங்குள்ள காவலர்களிடம் வம்பிழுப்பதும், பெண் காவலர்களிடம் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார்.
இந்நிலையில் மருதாச்சலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்தி விட்டு அன்னூர் காவல் நிலைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பணியில் இருந்த பெண் காவலர் மாதம்மாளிடம் ஆபாசமாக பேசியும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாதம்மாள் அளித்த புகாரின் பேரில், அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மருதாச்சலத்தைக் கைது செய்துள்ளனர்.