திருவண்ணாமலை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை- கொலையாளி கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணனின் திருமணத்தில் பங்கேற்க சிறுமி வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே வானாபுரத்தை அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி முருகாயி. இவர்களுக்கு பாலாஜி, ஆகாஷ் ஆகிய 2 மகன்களும், 15 வயது நிரம்பிய அஸ்வினி என்ற மகளும் உள்ளனர்.
மகன்கள், மகளுடன் முருகாயி பெங்களூருவில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். வேணுகோபாலுக்கு லேசாக கண் தெரியாது. அவர் மட்டும் மழுவம் பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வருகிற 9ம் தேதி பாலாஜிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக முருகாயி பெங்களூருவில் இருந்து மகன்கள், மகள் அஸ்வினியுடன் மழுவம் பட்டுக்கு வந்தார்.
பந்தக்கால் நடுவதற்காக கம்பு எடுத்து வர வேணுகோபால், முருகாயி, அஸ்வினி ஆகிய 3 பேரும் அங்குள்ள விவசாய நிலத்துக்கு சென்றனர். வேணுகோபாலும் முருகாயியும் கம்பு வெட்டிக் கொண்டிருந்தனர். அங்கிருந்து அஸ்வினியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அஸ்வினி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பண்டாரிநாதன்,36 என்பவர் அஸ்வினியை வழி மறித்து நிறுத்தினார்.
பின்னர் அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச் சென்றார். அங்கு அஸ்வினியை பலாத்காரம் செய்துள்ளார்.
அஸ்வினி தப்பிக்க முயன்று சத்தம் போடவே, பண்டாரி நாதன் பயந்து போய் அஸ்வினியின் வாயை மூடியதோடு கழுத்தை நெரித்தார். இதில் அஸ்வினி பரிதாபமாக இறந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், முருகாயியும் அங்கு ஓடி வந்தனர். அங்கு அஸ்வினி உயிரிழந்தார்.
சிறுமியை காணவில்லை என்று பெற்றோரும் உறவினர்களும் தேடிய போது, சடலமாக சிறுமி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பக்கமாக வந்த பண்டரிநாதன் மீது சந்தேகமடைந்த ஊர் மக்கள் அவரை அடித்து கேட்ட போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பண்டரிநாதனை கைது செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.