ஹலோ உங்களுக்கு வேலை ரெடி.. இப்படிக்கு அமெரிக்கன் எம்பசி - ஈமெயிலை நம்பி ஏமாந்த இளைஞர்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வெளிநாட்டு வேலை தருவதாக வந்த ஈ-மெயில் செய்தியை நம்பிய வாலிபரிடம் அமெரிக்க தூதரக அதிகாரியாக நடித்து கிட்டதட்ட ரூபாய் 4 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சேவியர். இவருடைய மகன் பிரவீன். பட்டப் படிப்பு படித்த இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய ஈமெயிலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவதாகவும், விரும்பினால் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை நம்பிய பிரவீன், அந்த பணியில் சேர ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தார். பின்பு, சில வாரங்கள் கழித்து அவருடைய மெயிலுக்கு தனியார் நிறுவன பணியில் சேர பணிநியமன ஆணை அனுப்பப்பட்டு இருந்தது.
அதோடு அனுப்பப்பட்டிருந்த செல்போன் எண்ணை பிரவீன் தொடர்பு கொண்டபோது, மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியின் பெயரில் மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அவர் தூதரக அதிகாரிதான் என பிரவீன்குமாரும் நம்பி உள்ளார். விசா பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என அந்த தூதரக அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இதே போல், தனியார் நிறுவன அதிகாரிகளும் பிரவீன்குமாரிடம் குறிப்பிட்ட பணத்தை கேட்டுள்ளனர். அவரும் பல்வேறு தவணைகளில் ரூபாய் 4 லட்சத்து 32 ஆயிரத்தை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், தொடர்ந்து நாட்களை கடத்தி வந்ததால் அவர்கள் மீது பிரவீனுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவர் மும்பையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்துக்கு நேரில் சென்று விசாரித்தார், அப்போது தான் தூதரக அதிகாரி பெயரிலும், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் பெயரிலும் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டது அவருக்கு தெரியவந்தது.
குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் பிரவீன்குமார் புகார் மனு கொடுத்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications