குடி உயிரையும் குடிக்கும்... பெருச்சாளி கடித்து பரிதாபமாக பலியான “போதை” பிளம்பர்!
கோவை: கோவை மாவட்டத்தில் தூங்கி கொண்டிருந்தபோது பெருச்சாளி கடித்ததில் பிளம்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை எற்படுத்தியுள்ளது.
கோவை ஆர்.எஸ் புரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன திருநீர்மலை. இவரது மகன் முத்துமாணிக்கவாசகம். பிளம்பர் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் ஆகியோர் உள்ளனர். முத்துமாணிக்க வாசகம் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தில் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் முத்துமாணிக்க வாசகத்தின் மனைவி கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் நெகமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தில் உள்ள தாய் வீட்டில் முத்துமாணிக்க வாசகம் தங்கி இருந்தார். வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முத்துமாணிக்கவாசகம் போதையில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது தூங்கிக்கொண்டிருந்த முத்துமாணிக்கவாசகத்தை ஒரு பெருச்சாளி கடித்தது.
இதில் வலி தாங்க முடியாமல் முத்துமாணிக்க வாசகம் அலறி துடித்தார். அதனைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முத்துமாணிக்கவாசகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications