பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு
திருவாரூர்: திருவாரூர் அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகள் கமலா (28). இவர் வடபாதிமங்கலத்திலுள்ள மருந்துக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை வடபாதிமங்கலம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தனது மகள் கொலை செய்யப்பட்டதாகவும் , இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிரிழந்த கமலாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் கமலாவை பாலியல் வன்கொடுமை செய்த மணிவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளி மணிவேலுக்கு பாலியல் வன்கொடுமைக்காக ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்திற்காக தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி செந்தில் குமரேசன் உத்தரவிட்டார்.