ஆசிரியையிடம் பஸ்சில் பாலியல் தொந்தரவு செய்த மனித உரிமைகழக பிரமுகர் கைது
சேலம்: சேலத்தில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனித உரிமைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்தி. இவர் பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது கணவர் சென்னையில் காவல் துறையில் பணியாற்றுகின்றார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் தேசிய மனித உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக உள்ளார். தங்கமணி கடந்த சில மாதங்களாக, பேருந்தில் செல்லும் ஆசிரியை கீர்த்திக்கு பக்கத்தில் போய் நின்றுகொண்டு, அவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து கீர்த்தி அவரை பலமுறை எச்சரித்தும் தங்கமணி ஒழுங்காக நடக்காமல் மீண்டும் கீர்த்திக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பொம்மிடியிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் கீர்த்தி பயணம் செய்தார். அப்போது, கீர்த்தியின் அருகில் வந்த தங்கமணி வழக்கம்போலவே அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கீர்த்தி கூச்சலிட்டு சத்தம் போட்டதுடன், தங்கமணியின் கன்னத்தில் அடித்துள்ளார். இதையடுத்து, பஸ்சில் வந்த மற்ற பயணிகள் தங்கமணியை பிடித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கீர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தங்கமணியை கைது செய்துள்ளனர்.