தனிக்குடித்தனம் அழைத்த மனைவி- பெற்றோருடன் தற்கொலை செய்த சாப்ட்வேர் பொறியாளர்
மதுரை: மதுரையில் மனைவி தனிக்குடித்தனம் அழைத்துச் சென்ற விரக்தியில் கணவன், தாய், தந்தையருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் அருகே திருப்பதி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜமுனா. இவர்களது ஒரே மகன் பிரபு. சாப்ட்வேர் எஞ்சினியர். இவர் வீட்டில் இருந்தபடியே பெங்களூரில் உள்ள சில சாப்ட்வேர் நிறுவனங்களுக்காக சில பணிகளை செய்து வந்தார்.
இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. பிரபுவுக்கும், சரண்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து பிரபு தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றார்.
தனிக் குடித்தனம் சென்ற மகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க சரண்யாவின் தந்தை தாமோதரன்
சென்னையில் இருந்து வந்திருந்தார். நேற்று பிற்பகல் அவர் மகளை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றார். அவர்களை கடைக்கு அனுப்பி விட்டு தனது தாய் வீட்டிற்கு பிரபு சென்றார். மாலை வரை சுப்பிரமணியின் வீட்டு கதவு திறக்காமல் இருந்ததால், பக்கத்து வீட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
வீட்டின் மாடியில் உள்ள அறையில் சுப்பிரமணி, ஜமுனா, பிரபுவும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை நடந்தா, வேறு காரணம் உள்ளதா என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.