பைக் மீது அரசு பஸ் மோதி மளிகைக்கடைக்காரர் பலி: இளம் பெண் கவலைக்கிடம்
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். அங்கிருந்த இளம் பெண் ஒருவரும் படுகாயம் அடைந்தார்.
உயிரிழந்த நபரின் பெயர் பால கிருஷ்ணன் (42). இவர் அரும்பாக்கம் அசோகா நகரை சேர்ந்தவர், ஜாபர்கான்பேட்டையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் இன்று காலை கோயம்பேடு சென்று தனது கடைக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு 100 அடி சாலையில் (ஜவகர்லால் நேரு சாலை) பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென போன் அழைப்பு ஒன்று வந்தது. இதைத் தொடர்ந்து பைக்கை ஈக்காட்டுத்தாங்கல் காசி தியேட்டர் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது, கோயம்பேட்டில் இருந்து சிறுசேரி வழியாக கேளம்பாக்கம் நோக்கி செல்லும் அரசு பேருந்து ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டு இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் டிரைவர் பேருந்தை நிறுத்த முயன்றார். ஆனால், பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் பேருந்தின் டயருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி இறந்தார்.
பேருந்துக்காக காத்திருந்த எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளத்தை சேர்ந்த துர்கா (21) என்பவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்துக்குள் இருந்தவர்களும் அலறினர்.
தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். உடல் நசுங்கி பலியான பாலகிருஷ்ணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த துர்காவையும் அதே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அவர் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பியோடிய அரசு பேருந்து டிரைவர் வெள்ளைச்சாமி (42) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டக்டர், டிரைவரிடம் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications