For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 மனைவி கட்டியும் நோ யூஸ் - குடிபோதையில் தகராறு செய்தவரை அடித்தே கொன்ற 2வது மனைவி

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் 3 மனைவிகளைத் திருமணம் செய்த ஒருவர் குடிபோதையில் தகராறு செய்த காரணத்தினால் அவரது 2வது மனைவி அவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், அறியானூர் அருகிலுள்ள வேடுகாத்தான்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார். தொடக்க காலத்தில் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்துவந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இப்போது அத்தொழிலை விட்டுவிட்டார். இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது.

தற்போது வேலை வெட்டியில்லாமல் இருக்கும் அய்யனாருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெருமாயி. இவருக்கு ராஜேந்திரன் என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனர். முதல் மனைவியை பிரிந்த அய்யனார், இரண்டாவதாக தனலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனலட்சுமியுடன் குடும்பம் நடத்தி வந்த அய்யனாருக்கு அஞ்சலை என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலானது. பின்னர், அவரையும் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அஞ்சலை மூலம் தாமரைச்செல்வி, நந்தினி, பானுப்பிரியா என்ற 3 மகள்களும், பாலமுருகன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 3வது மனைவியான அஞ்சலை மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். அஞ்சலை இறந்த பின்னர், அவருக்கு பிறந்த 4 குழந்தைகளையும் இரண்டாவது மனைவியான தனலட்சுமி பராமரித்து வந்தார். நான்கு பிள்ளைகளை காப்பாற்ற வேடுகாத்தான்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி முன்பு பள்ளி குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்களை விற்கும் கடை நடத்தி வந்தார் தனலட்சுமி.

இதற்கிடையே அய்யனார், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் ரகளை செய்வதும், குழந்தைகளை அடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் மனைவி தனலட்சுமியிடம் மது குடிக்கவும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அய்யனார் வீட்டிலிருந்த தனது குழந்தைகளை அவதூறான வார்த்தைகளை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது மனைவி தனலட்சுமி, ஏன் காலையிலேயே குழந்தைகளை திட்டுகிறீர்கள்? என கணவர் அய்யனாரை தட்டிக்கேட்டார்.

உடனே ஆத்திரம் அடைந்த அய்யனார், கடப்பாரையை எடுத்து வந்து மனைவி தனலட்சுமியை குத்துவதற்காக சென்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் அய்யானர் பிடித்திருந்த கடப்பாரையை பிடுங்கிய தனலட்சுமி திருப்பி அடித்தத்தில், அய்யனார் தலையில் பட்டு அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பிணமாக கிடந்த அய்யனாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த கடப்பாரையையும் போலீசார் கைப்பற்றினர். கணவர் அய்யனார் இறந்ததை கண்ட தனலட்சுமி தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Man married three, and second wife beaten him and killed him for his drunken habit in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X