மனைவி, மாமியார், பாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி: குழந்தையுடன் தப்பி ஓட்டம்
மானாமதுரை: மானாமதுரையை அடுத்த வேலூரில் குடும்பத்தகராறில் மனைவி, மாமியார், பாட்டியை வெட்டிக்கொன்றுவிட்டு குழந்தையுடன் கொலையாளி கணவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முருகபாஞ்சானை சேர்ந்தவர் பாண்டித்துரை வயது 30. வெவ்வேறு சம்பவங்களில் முத்தனேந்தல் செல்வம், அன்பழகன் உட்பட மூவரை கொலை செய்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.

இரு ஆண்டுகளுக்கு முன் மானாமதுரை அருகே வேலுாரை சேர்ந்த ராஜேஸ்வரி, 23, என்பவரை திருமணம் செய்தார்; ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
வேலுார் ஒத்தவீடு பகுதியில் உள்ள தாயார் வீட்டில் குழந்தையுடன் ராஜேஸ்வரி வசித்தார். நேற்று காலையில் அங்கு சென்ற பாண்டித்துரை மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ராஜேஸ்வரி மறுத்துவிட்டார்.

இரவு 10 மணிக்கு குடிபோதையில் அங்கு சென்ற பாண்டிதுரை மனைவி, அவரது தாயார் தனபாக்கியம், 52, பாட்டி ஆறுமுகம், 72, ஆகியோரை அரிவாளால் வெட்டினார். மூவரும் அதே இடத்தில் பலியாகினர். பாண்டித்துரை தப்பி ஓடிவிட்டார்.
இவர்கள் வசித்த வீடு ஒதுக்குப்புறமாக இருந்ததால் இச்சம்பவம் கிராமத்தினருக்கு உடனடியாக தெரியவில்லை. தற்செயலாக அந்தப் பக்கம் சென்ற உள்ளூர்காரர்கள் கொலை சம்பவம் பற்றி போலீசுக்கு தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்திற்குப்பின் ராஜேஸ்வரியின் ஒரு வயது குழந்தையையும் காணவில்லை.

மூன்று பேரை கொடூரமாக வெட்டி கொன்றுவிட்டு குழந்தையுடன் மாயமான பாண்டித்துரையை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications