ஹெல்மெட் போடாததால் வந்த வினை... ரூ.1 லட்சம் “பணால்” - சென்னை நபர் போலீசில் புகார்
சென்னை: வீட்டில் ஹெல்மெட்டை வைத்துவிட்டு சென்றதால் போலீசிடம் சிக்கியவர் பைக் பெட்ரோல் டேங்கில் எடுத்துச் சென்ற ரூபாய் 1 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரை சேர்ந்தவர் அண்ணாமலை. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் மாலை நிலம் வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுக்க ரூபாய் 1 லட்சம் பணத்தை பைக்கின் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு சென்றார். புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே வரும்போது அண்ணாமலையை டிராபிக் போலீசார் மடக்கினர்.

ஏன் ஹெல்மெட் போடவில்லை என அவரிடம் கேட்டனர். அதற்கு அண்ணாமலை அவசரமாக புறப்பட்டு வரும்போது வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை. பைக்கை நிறுத்தி விட்டு போய் ஹெல்மெட்டை எடுத்து வாருங்கள் என்று போலீசார் கூறி உள்ளனர். உடனே அவசரத்தில் வண்டியில் வைத்திருந்த பணத்தை மறந்து விட்டு சென்று விட்டார். வீட்டிற்கு சென்று ஹெல்மெட்டை எடுத்துவிட்டு வந்து பார்த்த போது வண்டியில் வைத்திருந்த பணம் ரூபாய் 1 லட்சம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பைக் டேங்க் கவரில் வைத்திருந்த பணத்தை எடுக்க மறந்து உங்களிடம் விட்டு விட்டு சென்று விட்டேன் என போக்குவரத்து போலீசாரிடம் அவர் கேட்டார். அதுபற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது என்று போலீசார் கைகழுவி விட்டனர். இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த பகுதி புதுவண்ணாரப்பேட்டை சிக்னல் பகுதி. அங்கு சிசிடிவி கேமராவை ஏற்கனவே போலீசார் பொருத்தியுள்ளனர். அதை கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications