காரைக்குடியில் காதல் திருமணம் செய்த மினி பஸ் டிரைவர் மர்ம மரணம்
காரைக்குடி: காரைக்குடியில் தனியார் பேருந்து ஓட்டுநர் குடும்பத் தகராறில் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தாயார் மற்றும் தந்தை உள்ளிட்ட மூவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்குடி நக்கீரன் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிகரன், 22, மினி பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது மினி பஸ்சில் பயணம் செய்தபோது ஹரிஹரனுக்கும், ரம்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்திற்குள் எதிர்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஹரிகரன் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபித்து கொண்டு ரம்யா தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் வீட்டின் அருகே ஹரிகரன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஹரிஹரன் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் குடிபோதையில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாராம்.அப்போது ஹரிகரன் தனது தாயார் நாகேஸ்வரி, தாய்மாமன் நாகராஜன் ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் தகராறு முற்றி தள்ளிவிட்டதில் ஹரிஹரன் நிலை தடுமாறி கல்தூணில் அடிபட்டு விழுந்தாராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி வடக்குக் காவல்நிலையப் போலீஸார் ஹரிகரன் தந்தை சுப்பிரமணி, தாயார் நாகேஸ்வரி, தாய்மாமன் நாகராஜன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.