டீத்தூளில் தங்கம் – கடத்தி வந்த இலங்கை வாலிபர் சென்னை விமானநிலையத்தில் கைது
சென்னை: சென்னை விமானநிலையத்தில் இலங்கையில் இருந்து சாமர்த்தியமாக டீத்தூளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தடைந்த இலங்கை விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக செய்தி வெளியானதால் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளைச் சோதனை செய்தனர்.
அப்போது, சுற்றுலா விசாவில் வந்திருந்த இலங்கை வாலிபர் ஞானமதிகுமார் என்பவர் மீது சந்தேகம் எழுந்த காரணத்தால் அவரை தனியாக அழைத்து சோதனை செய்தனர்.
அவருடைய பேச்சு முன்னுக்கு பின்னாக இருந்ததால் தனியறை விசாரணை நடத்தப்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள், டீத்தூளில் தங்கத்தைப் பொடியாக்கி கலந்து கடத்தி வந்ததை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் மதிப்பு கிட்டதட்ட 15 லட்ச ரூபாய் ஆகும்.
தங்கம் கடத்தி வர புது யுக்தியைக் கையாண்ட அந்த இலங்கை வாலிபரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.