பாட்டியைக் காரணம் காட்டி கூட்டிச் சென்ற மனைவியை மீட்டுத் தருக.. தீக்குளிக்க முயற்சித்த இளைஞர்
சேலம்: காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே அல்லிகுட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் மாதேஸ்வரன் ( 27). ஐடிஐ படித்துள்ள இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அகல்யாவைக் காதலித்து வந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக இருந்து வந்த இவர்களது காதல் விவகாரம் அகல்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகல்யாவிற்கு வேறு இடத்தில் அவர்கள் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர்.
பெற்றோரின் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறிய மாதேஸ்வரன் - அகல்யா காதல் ஜோடி, ஈரோடு மாவட்டத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர்கள் பாதுகாப்புக் கோரி தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்து காதல்ஜோடியை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி பாட்டிக்கு உடம்பு சரியில்லை எனக் கூறி அகல்யாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மீண்டும் அகல்யா வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல்யாவின் பெற்றோரிடம் தனது மனைவியை தன்னுடன் வாழ்வதற்காக அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளார். ஆனால், அகல்யாவை அனுப்ப அவரது பெற்றோர் மறுத்து விட்டனர்.
இதனால் மனமுடைந்த மாதேஸ்வரன் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விரைந்து சென்று மாதேஸ்வரனைக் காப்பாற்றினார்கள்.
பின்னர், மாதேஸ்வரனை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாதேஸ்வரன், தனது காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரினார். அதற்கு உரிய விசாரணைக்குப் பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் படும் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications