திருமணம் செய்வதாக சிறுமியைக் கடத்திய வழக்கு: வட்டி கடைக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை
சென்னை: திருமணம் செய்வதாகக் கூறி மைனர் சிறுமியை கடத்திச்சென்ற வழக்கில் வட்டித்தொழில் செய்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த சோமு என்ற சோமசுந்தரராஜ் (36), வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். தாயாரிடம் வட்டி வசூலிக்கச் சென்ற போது, அவரது மகளைக் கண்ட சோமு, அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை மயக்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி அனிதாவை திருப்பதிக்கு அழைத்து சென்றுவிட்டார். இதுகுறித்து விஜயா கொடுத்த புகாரின் அடிப்படையில், அயனாவரம் போலீசார் சோமு மீது சிறுமி கடத்தல் மற்றும் பலாத்கார சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசதீஷ், ‘சோமசுந்தரராஜ் மீது சுமத்தப்பட்ட பலாத்காரக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மைனர் பெண்ணை கடத்திச்சென்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்‘ எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications