மோடி பற்றி மன்மோகன் சிங் கருத்து: தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்
சென்னை: நரேந்திர மோடி பற்றி பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ள கருத்துக்கள் சரியானதல்ல. அவரது பேட்டி தெளிவற்றதாக உள்ளது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குஜராத் கலவரத்துக்கு காரணமான நரேந்திர மோடிக்கு என்னை விமர்சிக்கும் தகுதியில்லை என்றும், ஆயிரக்கணக்கானவர்களை கொன்றவன் நான் அல்ல என்றும் ஆவேசமாக கூறினார்.
மேலும் விலைவாசி உயர்வு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட கேள்விகளுக்கும் மன்மோகன் பதிலளித்தார்.

இந்நிலையில் பிரதமரின் பேட்டி குறித்து புதிய தலைமுறை சேனலில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன், பிரதமரின் பேட்டி தெளிவற்றதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை, ஊழல் குறித்து பிரதமர் மழுப்பலான பதிலை அளித்துள்ளார் என்று கூறிய தமிழிசை, நரேந்திர மோடி குறித்த பிரதமரின் கருத்து சரியல்ல, கண்டனத்திற்கு உரியது என்று கூறினார்.
இதனிடையே திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் என்பது பிரதமருக்கு தெரியாதது அல்ல என்று கூறிய ராதாகிருஷ்ணன், தோற்கக் கூடிய காங்கிரசுக்கு தலைமை ஏற்க மன்மோகன் சிங் தயாராக இல்லை என்றார்.
நரேந்திர மோடி குறித்து மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராதாகிருஷ்ணன், பிரதமர் பதவி குறித்து மன்மோகன் சிங்கின் கருத்து அவரது கருத்து அல்ல என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பா.ஜ.க நாளை முதல் தொடங்கும் என்றும் பொன்.ராதாகிஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications