சென்னை மற்றும் புறநகரங்களில் கனமழை!
சென்னை: சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில், சென்னையில் கோடம்பாக்கம், அசோக் நகர், தியாகராயர் நகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
அதேபோல் ராயப்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. மேற்கு மாம்பலம், அயனாவரம், வேளச்சேரி, தரமணி, எழும்பூர், அடையார் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் சீர்காழி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications