அடங்க மறுக்கும் எச் ராஜா.. மெரினா புரட்சியை ஆரம்பித்தது தேச விரோத தீய சக்திகளாம்!
மெரினா புரட்சியை தொடங்கியது தேசவிரோத தீய சக்திகள் என வேடசந்ததூரில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் எச் ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: மெரினா புரட்சியை தொடங்கியது தேசவிரோத தீய சக்திகள் என வேடசந்ததூரில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் எச் ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா நீதிமன்றத்தையும் காவல்துறையையும் இழிவாக விமர்சித்தார். இதுதொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி நடத்தும் 12 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி பொது கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்துகொண்டார்.
தேச விரோத தீய சக்திகள்
அப்போது பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை அவர் கூறினார். அவர் பேசியதாவது, மெரினாவில் நடந்தது புரட்சி அல்ல. இது ஆரம்பித்ததே தேச விரோத தீய சக்திகள். தம்பி ஹிப்ஹாப் ஆதி அவர்கள் வெளியில் வந்த பிறகு உள்ளுக்குள் பயங்கரவாதிகள் இருந்தார்கள் என்று அவரே ஒத்துக் கொண்டார்.
மக்கள் அதிகாரம்
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 4 தேச விரோத தீய சக்திகள் தமிழகத்தில் ஒருங்கிணைத்து உள்ளார்கள். இடதுசாரிகள் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தூத்துக்குடியில் நக்சல்வாதத்துக்கு பாதை போட்டு கொடுத்தது மக்கள் அதிகாரம், நெடுவாசலில் கதிராமங்கலத்தில் மற்றும் எட்டு வழி சாலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
மணியடித்த பங்குதந்தை
தூத்துக்குடியில் 99 நாள் அமைதியாக நடைபெற்ற போராட்டம் 100 வது நாள் மாதா கோவிலில் மணியடித்த பங்கு தந்தை ஜெயசீலன் தானே கலவரம் செய்து துப்பாக்கி சூட்டில் மாட்டி கொண்டார். வைகோ கதறி அழுதார்.
மதம் மாற்றும் சக்தி
இவாஞ்சலிஸ். கிறிஸ்தவ மதம் மாற்றும் சக்தி இவர்கள் ஊடகங்கள், கல்வி கூடங்கள், அரசு நிர்வாகத்தில் குறிப்பாக அரசு பள்ளியில் சிறுபான்மையினர் தலைமை ஆசிரியராக இருக்கின்றனர். 1840ல் மயிலாப்பூரில் ஜி யு போப் மற்றும் அதே கால கட்டத்தில் திருநெல்வேலியில் கால்டுவெல்லும் வந்த பிறகு மொழி சண்டை மற்றும் சாதிச் சண்டைகளும் உருவெடுத்தன. வெளிநாட்டவர் பாதை போட்டு கொடுக்கிறார்கள்.
சீமான், திருமுருகன் காந்தி
இன்று தமிழை வைத்து தமிழகத்தில் சீமான், திருமுருகன் காந்தி போன்றோர் கலவரத்தை தூண்டி விடுகின்றனர். இதற்கு எடுத்துக் காட்டாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்கள் மற்றும் சிவன் கோவில்களை இடிப்போம் என்று திருமாவளவன் ஜவாஹிருல்லா உடன் சேர்ந்து ஒரே மேடையில் பேசினர்.
வெளிநாடுகளில் சிலைகள்
செயல்படாத ஆலயங்களில் சிலைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. 2100க்கும் மேற்பட்ட சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லண்டன் போன்ற வெளிநாடுகளில் உள்ளது.
சக்திவாய்ந்த அரசியல்வாதி
2003ல் ஜெயலலிதா ஆட்சியில் திருவண்ணாமலையில் கோவில்கள் இருந்த இடத்தில் கட்டிடங்களை இடித்து விட்டு கோவில் கட்ட உத்தரவிட்டார். ஆனால் இதுவரை கட்டவில்லை. தமிழ்நாட்டில் most powerful politician ஆக ஜெயலலிதா இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
கட்டிடங்கள்தான் உள்ளது
ஆனால் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு அறநிலை துறை அதிகாரிகள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான். 5 சதவீத கோயில்கள் இருந்த இடத்தில் கட்டிடங்கள் தான் உள்ளது. இவ்வாறு எச் ராஜா பேசினார்.