கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம் விலை... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நாகர்கோவில் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னவெங்காயம், சர்க்கரை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி கொளுத்தி வைத்தனர். மேலும், சின்ன வெங்காயத்தை மாலையாக கோர்த்து அதை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் நகர செயலாளர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி முன்னிலை வகித்தார். நகர்குழு உறுப்பினர்கள் மோகன், அஸிஸ், பரமசிவம், ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நகரச் செயலாளர் பெஞ்சமின் கூறியதாவது:
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அப்படியே பின்பற்றிவரும் அதிமுக அரசின் நடவடிக்கை காரணமாக மக்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் ரேஷனில் சக்கரை விலையை உயர்த்தியது மட்டுமல்லாமல் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.180-க்கு மேல் உயர்ந்துள்ளது. சமையல் கேஸ் விலை ரூ.850-க்கும் மேல் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லவிதமான மானியங்களையும் ரத்து செய்யும் நோக்குடன் செயல்படும் அரசை கண்டித்தும் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு பெஞ்சமின் கூறினார்.












Click it and Unblock the Notifications