மேட்டூர் வனப்பகுதியில் ஆயுதப் புதையல்... வீரப்பன் பதுக்கியதா.. புலிகளுடையதா?
மேட்டூர்: சேலம் மேட்டூர் அருகே வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கையெறி குண்டுகள் உள்பட ஆயுத குவியல் வீரப்பனுக்குச் சொந்தமானதா.. புலிகள் பதுக்கியதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகில் பச்சமலை காப்புகாடு உள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் குழிகள் தோண்டியபோது ஏராளமான ஆயுதங்கள், குண்டுகள் செய்வதற்கான வெடிப் பொருட்கள் சிக்கின.
மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வந்து, அவற்றை அப்புறப்படுத்தி ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு விடுதலைப்புலிகள் முகாமிட்டு போர் பயிற்சிகள் பெற்றனர். அப்போது விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதா இந்த ஆயுதங்கள்? அல்லது வேறு தீவிரவாத அமைப்புகள் பதுக்கியதா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பன் பதுக்கியதா?
போலீசார் நேற்று காலை அப்பகுதியில் உள்ள முட்புதரில் 3 கையெறி குண்டுகளை கண்டெடுத்தனர். ஆயுத புதையல் கிடைத்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் இருந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டமும் நவீன துப்பாக்கி, கண்ணி வெடிகளை பயன்படுத்தி வந்தது. எனவே, வீரப்பன் கும்பலை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரும்பு பேரல் சில ஆண்டுகளுக்குள் புதைக்கப்பட்ட பேரல் போல் காணப்படுவதால் இது புலிகளுக்கு சொந்தமானதாக இருக்காது என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.