மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியார்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கணக்கு ஆசிரியரை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள கொத்தக்கோட்டையில் இருக்கும் அரசு உயர் நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் பணிபுரியும் கணக்கு ஆசிரியர் செல்வம் தங்களிடம் சில்மிஷம் செய்வதாக மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு கோபம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுக்கையிட்டு செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி சண்முகம் போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கணக்கு ஆசிரியர் செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்முகம் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.