கூடங்குளம் மின்சாரத்தின் பெரும்பங்கை தமிழகத்துக்கு ஒதுக்க ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: கூடங்குளம் மின்சாரத்தின் பெரும்பங்கை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை மற்றும் எண்ணமாகும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யூனிட் 1-ல் உற்பத்தி செய்யப்பட்ட ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட மின்சாரம் போக, ஒதுக்கப்படாத 150 மெகாவாட் மின்சாரத்தில் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு 2012 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒதுக்கப்பட்டதை நினைவு கூற விரும்புகிறேன்
மீதமுள்ள 50 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கு வழங்க அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசின் பரிசீலனையில் இருந்தது. பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் மீதமுள்ள 50 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்தினுடைய மின் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தமிழகத்திற்கு ஒதுக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இனி உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் பெரும்பங்கு தமிழகத்திற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications