சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினர் ... நடிகை கஸ்தூரி பங்கேற்பு
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்.
நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோன மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவி அரியலூர் அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு நேற்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனிதாவின் மரணத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்றும் நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கி மே 17 இயக்கத்தினர் சென்றனர்.
அப்போது அவர்கள் அலுவலகத்துக்கு 500 மீட்டர் தொலைவில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த போராட்டத்தில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றினர். சென்னை பாஜக அலுவலகத்துக்கு 2-ஆவது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.