உலகம் முழுவதுமே 2016 மே ரொம்ப ஹாட்.... நாசா தகவல்
சென்னை: கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையை எந்த அளவிற்கு மறக்க முடியாதோ அதே போல இந்த ஆண்டு மே மாத வெயிலையும் அத்தனை எளிதில் மறக்க முடியாது. வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கும், வீட்டிற்கு இருக்க முடியாத அளவிற்கு வெயில் வறுத்து எடுத்தது.
சென்னை மட்டுமல்ல உலகம் முழுவதுமே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி எடுத்துள்ளது. கடந்த மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதமாக இருந்ததென்று, நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது.

சுட்டெரித்த வெப்பம்
கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, கடந்த மே மாதத்தில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. வழக்கமாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாகவும், மே மாதத்தில், பல பகுதிகளில் வசந்தகாலமாகவும் இருக்கும். ஆனால், கடந்த மே மாதத்தில் கடுமையான வெப்பம் நிலவியது. வழக்கமான வெப்பநிலையை விட 1.67 பாரன்ஹீட் அதிகரித்திருந்தது.

உருகிய பனி
இதுவரை இல்லாத அளவில், பூமியின் வடமேற்பரப்பு முழுவதும் கடும் வெப்பநிலையை உணரமுடிந்ததாகவும்
இதனால், ஆர்க்டிக் மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கமான அளவைவிட, அதிகளவில் பனிப்பாறைகள் உருகியுள்ளதாகவும், நாசா குறிப்பிட்டுள்ளது. கடந்த, 78 ஆண்டுகளில் இல்லாத அளவு பனி உருகியுள்ளது.

கார்பன் டை ஆக்சைடு
இந்த வெப்பத்தால், பனி உருகியது மட்டுமின்றி, எல் நினோ தாக்கத்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண்டத்தில், சமீபத்தில், வழக்கத்துக்கு அதிகமான மழை பெய்தது. எல் நினோ தாக்கம் அதிகமாக இருந்ததற்கு, கார்பன் டை ஆக்சைடு படலம் அதிகரித்ததே காரணம். எனவே, கார்பன் டை ஆக்சைடு அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும் என நாசாவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ
எல் நினோ பருவமாற்றம் காரணமாக, கடந்த மே மாதத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெயில் சுட்டெரித்த அனுபவம் ஏற்பட்டது. ஆசிய நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாக, நாசா கூறியுள்ளது.

மேலும் கொளுத்தும்
வருகிற 2061 முதல் 2080ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் அண்டார்டிகாவை தவிர மற்ற பகுதிகளில் இதைவிட அதிக அளவு வெயில் கொளுத்தும் என்றும் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

குளிரும் மழையும்
வெப்பம் சுட்டெரித்தது போய் தற்போது லா நினோ என்ற குளிர் சீசன் தொடங்கியுள்ளது. இதனால், வரும் நாட்களில் கூடுதல் குளிர், மழை பதிவாகவும் வாய்ப்புள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியின் மத்திய மற்றும் மேற்பரப்பில் இத்தகைய மாறுதல்களை உணர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம்
கடந்த சில மாதங்களாக வெயில் வறுத்தெடுத்தது இனி மழையும் குளிரும் வாட்டும் என்ற நாசாவின் எச்சரிக்கை இப்போதே அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. வெப்பம், மழை என மாறி மாறி ஏற்படுவதால் சுகாதார சீர்கேடு, பயிர்கள் அழிவு, கடுமையான வறட்சி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, கார்பன் வெளியேற்றத்தை குறைத்து தட்பவெப்ப நிலையை சீரமைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications