நான் கருப்பு.. குழந்தைங்க மட்டும் எப்படி சிகப்பு.. சந்தேகபிராணியின் வெறிச் செயல்.. மனைவி கொலை
மயிலாடுதுறை: நான் கருப்பாக இருக்கிறேன், குழந்தைகள் மட்டும் எப்படி சிகப்பாக பிறக்கும் என சந்தேகத்தால் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை அடித்தே கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (32). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அதே தெருவை சேர்ந்த அதிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அகிலாவுக்கு முதல் குழந்தை பிறந்த போது குழந்தை சிகப்பாக பிறந்ததால் அவர் மனைவின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார் ஐயப்பன்.
இரு ஆண்டுகளுக்கு கழித்து அகிலா மீண்டும் கர்ப்பம் தரித்தார். அப்போது பிறக்கும் குழந்தை எந்த கலரில் இருக்கிறது என்பதை பார்க்க ஐயப்பன் ஆவலாக இருந்தார். ஆனால் அந்த குழந்தையும் சிகப்பாகவே இருந்தது. இதனால் ஐயப்பனுக்கு சந்தேகம் மேலும் தீவிரமடைந்தது. இதையடுத்து தினமும் அகிலாவை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
தினமும் சிகரெட்டை பற்ற வைத்து அகிலா மீது ஐயப்பன் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. இதனால் அகிலா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு அவரது பெற்றோர் குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும், இதற்காக கோபித்துக் கொண்டு புருஷனை விட்டுவிட்டு வரக் கூடாது என புத்திமதி கூறி கணவர் வீட்டுக்கே அகிலாவை மீண்டும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அகிலாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து ஐயப்பன் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். அகிலாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மயங்கிக் கிடந்த அகிலாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அகிலாவின் தந்தை சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் அரசு தரப்பில் 18 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் வாதாடிய வந்த நிலையில், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கந்தகுமார் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின்படி மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குத்தாலம் போலீசார் ஐயப்பனை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.












Click it and Unblock the Notifications