'ஒரு மாச தவணை கட்டல'.. ரவுடிகளுடன் வந்து வீட்டில் மிரட்டிய வங்கி? இளம் விவசாயி விபரீத முடிவு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கடனை கட்ட சொல்லி ரவுடிகளுடன் வந்து தனியார் வங்கி அதிகாரிகள் மிரட்டியதால், அவமானத்தில் இளம் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் மாதம் மாதம் தவணை தொகை அடுத்த மாதத்தில் இருந்தே கட்டியாக வேண்டும். ஒரு மாதம் கட்டாவிட்டாலும் 900 ரூபாய்க்கு மேல் தண்டத்தொகை அழ வேண்டியதிருக்கும். தொடர்ந்து சில மாதங்கள் கட்ட முடியாவிட்டால் சிபில் ஸ்கோர் அடியாகும். அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

இந்நிலையில் சந்தர்ப்ப சூழலால் கடனை கட்ட முடியாத நிலை ஏற்படும் போது வங்கிகள் தரப்பில் சில நேரங்களில் கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்து சிலர் உயிரையே விட்டுவிடுகிறார்கள். அப்படித்தான் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கப்பூர் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கப்பூர் மேலத்தெருவை சேர்ந்த 31 வயதாகும் வினோத் குமாருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். வினோத் குமார் கடந்த 2021-ம் ஆண்டு, மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவன கிளையில் ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளார். அந்த வைத்து அறுவடை எந்திரம் வாங்கியுள்ளார். அந்த அறுவை எந்திரத்தை வாடகைக்கு விட்டு தொழில் செய்தும் வந்துள்ளார்.
ஆனால் வினோத் எதிர்பார்த்த அளவிற்கு நெல் அறுவடை இயந்திரம் மூலம் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வினோத் சிரமத்தை சந்தித்து வந்துள்ளார். அவரால் தொடர்ந்து இஎம்ஐ செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், திங்கள்கிழமை காலை அதே பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் வினோத்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் குடும்பத்தினர், கதறி அழுதபடி வந்து வினோத்தின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டது. இதனிடையே தகவல் அறிந்து வந்த பெரம்பூர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது வினோத்குமார் குடும்பத்தார் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் வரை 6 மாதங்களுக்கான தவணைத்தொகை கட்டாமல் நிலுவையில் இருந்துள்ளது. பின்னர் மொத்தமாக நிலுவைத் தொகையை செலுத்திவிட்டோம். கடந்த ஆகஸ்டு மாதத்துக்கான நிலுவைத் தொகை மட்டுமே பாக்கி இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ரவுடிகளுடன் வீட்டுக்கு வந்து வினோத்குமாரின் மனைவி மற்றும் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரடடி உள்ளார்கள். இதனால் மனமுடைந்த வினோத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தன்னுடைய தம்பி வினோத் இறந்தது தெடர்பாக அவரது அண்ணன் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது ஒருபுறம் எனில், வினோத்தை மிரட்டிய தனியார் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் உடல வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததன் பேரில் உடலை பெற்று சென்றார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications