யார் பெற்ற மகளோ.. ஊர் கும்பிடும்.. 'வெள்ளைக்கார டாக்டர் அம்மா'.. மறைவால் சோகத்தில் மயிலாடுதுறை
மயிலாடுதுறை: ஆஸ்திரேலியாவில் பிறந்து மயிலாடுதுறை பகுதியில் 49 ஆண்டுகாலம் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து மருத்துவர் தினத்தன்று உயிர் நீத்த வெள்ளைக்கார டாக்டர் அம்மா.
Recommended Video
ஆஸ்திரேலியாவில் 1923ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிறந்தவர் பில்லிப் ரோட்ரிக்ஸ். சென்னையில் எம்பிபிஎஸ் படித்த இவர் 1949ம் ஆண்டு முதல் மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.
அதன் பின்னர்1955 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தில் கட்டப்பட்ட மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த மகப்பேறு மருத்துவமனைக்கு மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

பிரசவம்
அதிலிருந்து 35 ஆண்டு காலம் நகராட்சி மகப்பேறு மருத்துவமனை மருத்துவராக பணியாற்றினார். மருத்துவமனையில் இருக்கும்போது மட்டுமின்றி டவுண்டேஷன் அருகில் குடியிருந்து கொண்டு வீட்டில் இருந்தும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அவசர பிரசவங்களுக்கு இரவு எத்தனை மணி அளவில் இருந்தாலும் மாட்டுவண்டியில் சென்று பிரசவம் பார்த்து வந்தார்.

நகராட்சி மருத்துவமனை
நகராட்சி மருத்துவமனை என்பதை மறந்து பொதுமக்கள் வெள்ளைக்காரம்மா ஆஸ்பத்திரி என்று அடைமொழியுடன் அழைக்கும் அளவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆங்கிலோ இந்தியன் ஆன இவரது கணவர் தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் மறைந்த பின்பு முதுமை காரணமாக 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இவரது குடும்பத்தினருடன் சென்று வசித்து வந்தார்.

உறவினர்கள் தகவல்
கடந்த மே மாதம் 16ஆம் தேதி தனது 98வது வயதில் குடும்பத்தினருடன் கொண்டாடிய திருமதி ரோட்ரிக்ஸ் கடந்த சில நாட்களாக முதுமை காரணமாக நோயுற்று இருந்தார். இந்நிலையில் மருத்துவர் தினமான நேற்று அவர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலியாவிலுள்ள அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வருத்தத்தில் மயிலாடுதுறை
மயிலாடுதுறையின் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆக ஆயிரக்கணக்கான பிரசவங்களை, பணம் இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்த வெள்ளைக்காரம்மா டாக்டர் மறைவிற்கு மயிலாடுதுறை பொதுமக்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications