மதிமுக 24வது பொதுக்குழு: திருச்சிக்கு அழைக்கிறார் வைகோ
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 24வது பொதுக்குழு கூட்டம் நாளை திருச்சியில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்று வைகோ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவில் தனக்கென்று தனிப்பெரும் கூட்டத்தையும் கொண்டிருந்த வைகோ கடந்த 1992ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல முயன்றார் என்ற வீண்பழியுடன் வைகோ அங்கிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

வைகோ
மக்களுக்காக உழைக்கும் அரசியல்வாதி தமிழக அரசியலில் தனக்கென்று தனிப்பட்டாளத்தை உருவாக்கிய வைகோ அரசியலில் மாபெரும் சக்தியாகவே திகழ்ந்தார். 1996ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல் தொடங்கி பல தேர்தல்களை சந்தித்துள்ளார் வைகோ.

தனி செல்வாக்கு
பொதுமக்கள் பிரச்சனைகள் தீரவும், விவசாயிகளுக்காகவும், ஈழத்தில் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், உலக தமிழர்களின் நலனுக்காகவும் மைக் தெறிக்கும் அளவுக்கு உக்கிரமாக பேசும் வைகோவிற்கு மக்கள் மத்தியில் இன்றும் தனி செல்வாக்கு உண்டு.

நடைபயணம், போராட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக துவங்கிய மது ஒழிப்பு நடைப்பயணம், முல்லை பெரியாறு பிரச்சனையில் போராடி வெற்றி கண்டது, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை என ஒவ்வொரு போராட்டங்களிலும் வைகோ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

2011 சட்டசபை தேர்தல்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெளியேறிய வைகோ அத்தேர்தலை போட்டியிடாது புறக்கணித்தார்.
2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து வைகோ தேர்தல் களத்தில் குதித்தார். நிச்சயம் இந்த முறை வைகோ தேர்தலில் பெற்றிபெறுவார் என்று பலமாக எதிர்பார்க்கப்பட்டபோதும் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

மக்கள் நலக்கூட்டணி
கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோருடன் இணைந்து மக்கள் நலன்காக்கும் கூட்டு இயக்கத்தை தொடங்கிய வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியாக மாற்றினார். இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது வைகோ செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் களத்தில் வைகோ
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மக்களை சந்தித்து வருகின்றனர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள். பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதி வருவது வைகோ உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

24வது பொதுக்குழு கூட்டம்
தனக்கென்று தனிசெல்வாக்குடன் திகழும் வைகோ தமிழக அரசியலில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் 24வது பொதுக்குழு நாளை திருச்சியில் நடைபெற உள்ளது. மதிமுகவின் 24வது பொதுக்குழு வரும் 24.02.2016 புதன்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி காஜா நகர், ஜமால் முகமது கல்லூரி அருகில் உள்ள வி.எஸ்.எம். மகாலில் நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தல் வியூகங்கள்
இந்தக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும், கெயில் நிறுவனம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடுவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications