காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், தமிழகத்தின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டவும், சட்ட அங்கீகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் இன்று 07.09.2015 திங்கள்கிழமை காலை, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தலைமைக் கழகம், தாயகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

MDMK appeals to PM to constitute Cauvery Management Board

கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல்

கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தலுக்கான புதிய உறுப்பினர் சேர்த்தல் 2015 செப்டம்பர் 17 ஆம் நாளில் தொடங்கி 2015 அக்டோபர் 31 ஆம் நாள் நிறைவு அடையும். கழக உறுப்பினர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டு, கழக அமைப்புகளின் தேர்தல்களைக் கீழ்க்கண்டவாறு நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தேர்தல் நாள் நடைபெறும் அமைப்பு

2015 நவம்பர் 21 முதல் டிசம்பர் 10 வரை கிளைக் கழகம்

2015 டிசம்பர் 1 முதல் 15 வரை மாநகர வட்டக் கழகம்

2015 டிசம்பர் 16 முதல் 20 வரை பேரூர்க் கழகம்

2015 டிசம்பர் 21 முதல் 31 வரை ஒன்றியக் கழகம், நகரக் கழகம்

2016 ஜனவரி 24 மாவட்டக் கழகம்

2016 பிப்ரவரி 10 தலைமைக் கழகத் தேர்தல் நடைபெறும்.

செப்டம்பர் 21 பேரணி

இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசால் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனப் படுகொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தவும், கடந்த 67 ஆண்டுகளாக சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டு, நாலாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டு, மானத்தோடும் உரிமையோடும் வாழ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டதால், ஈழத் தமிழ் இளந்தலைமுறையினர் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் ஆயுதப் போராட்டம் நடத்தி, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் அறிவிக்கப்படாத ஒரு அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தினர்.

வல்லாண்மை அரசுகளான இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும், அணு ஆயுத நாடுகளான பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளும் சிங்கள அரசின் முப்படைகளுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கியதாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய யுத்தத்தை அனைத்து வழிகளிலும் இந்திய அரசே இயக்கி உதவியதாலும் போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

2009 ஏப்ரல், மே மாதங்களில், பச்சிளம் பாலகர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயது முதிர்ந்த பெரியவர்கள் என எவரையும் விட்டு வைக்காமல் இலட்சக்கணக்கானவர்களைச் சிங்கள அரசு கொன்று குவித்தது. கொடூரமான இனப்படுகொலை நடத்திய சிங்கள ராஜபக்சே அரசுக்கு ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில், 2009 மே இறுதியில் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய அநீதியும் நிகழ்ந்தது.

MDMK appeals to PM to constitute Cauvery Management Board

மனித உரிமைக்கவுன்சில் அணுகுமுறை

தமிழக மாணவர்களும், இளந் தலைமுறையினரும் நடத்திய போராட்டங்களும், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளில் புலம் பெயர்வாழ் ஈழத் தமிழர்கள் இடையறாது மேற்கொண்ட போராட்டங்களும், மனித உரிமை கவுன்சிலில் அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்தின.

முழுமையான நீதிக்கு வழிகாட்டாவிடினும் கடந்த ஆண்டு மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா மேலும் நான்கு நாடுகளோடு முன்வைத்த தீர்மானம் இந்தியா, பாகிÞதான் உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்காதபோதும் நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழுவினரை இலங்கை நாட்டுக்குள் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை.

பன்னாட்டு விசாரணை

இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றங்கள் அல்ல; அப்பட்டமான இனப்படுகொலையே ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பன்னாட்டு விசாரணைக்குழுவின் அறிக்கை வைக்கப்படவில்லை. இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அந்த அறிக்கை தாக்கல் ஆகும் எனத் தெரிகிறது.

படுகொலைகள் நடைபெற்ற இடத்திற்கே செல்ல முடியாத குழுவின் அறிக்கையில் நீதி கிடைக்காது. இந்தப் பின்னணியில் அமெரிக்க அரசின் வெளியுறவு துணைச் செயலாளர் நிசி தேசாய் பிஸ்வால், ‘பன்னாட்டு விசாரணை தேவை இல்லை; இலங்கையில் உள்நாட்டு விசாரணையே போதும்' என்று, கொலையாளியைத் தீர்ப்பாளியாக்கும் திட்டத்தைத் தெரிவித்துள்ளார்.

மாபெரும் பேரணி

இலங்கையில் தற்போது அமைந்துள்ள தேசிய அரசில் தமிழர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது. வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறாது. சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படாது. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காது. அமெரிக்க - இலங்கை கூட்டுச்சதியில் இந்திய அரசும் உடன்பட்டுத் துரோகம் செய்கிறது.
எனவே, ஈழத்தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா.மன்றத்தையும், மனித உரிமைக் கவுன்சிலையும் வலியுறுத்துவதற்காக, செப்டம்பர் 21 ஆம் தேதி ஜெனீவாவில் மாபெரும் தமிழ் மக்கள் பேரணியை எழுச்சியுடன் நடத்த புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் அழைப்பு விடுத்து உள்ளனர். அங்கே இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் உரிமை முழக்கம் விண்முட்ட எழ இருக்கின்றது.

எனவே, அதே நாளில் தாய்த் தமிழகத்திலும் ஈழத்தமிழ் உணர்வாளர்களும், அமைப்புகளும் நீதி கேட்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 21 ஆம் தேதி காலை 11 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்ட அறப்போர் நடத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

காவிரியில் தண்ணீர்

காவிரி பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடுவதற்குப் பதிலாக, நீர் இருப்பு குறைவைக் காரணம் கூறி இந்த ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் தேதி தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டால்தான் கடைமடை பகுதி வரை காவிரி நீர் சென்றடைந்து விவசாயிகள் பயன் பெற முடியும். ஆனால், சுமார் 12 இலட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கு வெறும் 13 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கடைமடை பகுதிகளில் உரிய தண்ணீர் இல்லாமல் நேரடி நெல் விதைப்பு முறையில் விதைக்கப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவேதான் தமிழக முதலமைச்சர் காவிரியில் தமிழ் நாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டிய 27.557 டி.எம்.சி. நீரை திறந்துவிட மத்திய அரசு கர்நாடக அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

கர்நாடகா மறுப்பு

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, காவிரியில்நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறி இருக்கிறார். காவிரி நடுவர் மன்றத்தின் இறதித் தீர்ப்பு பிப்ரவரி 5, 2007 இல் வெளியிடப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாமல் காலதாமதம் செய்த காங்கிரஸ் கூட்டணி அரசு, பிப்ரவரி 19, 2013 இல் தான் அரசிதழில் வெளியிட்டது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் மிகத் தெளிவாக எவ்வாறு நடுவர் மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

காவிரி ஒழுங்கு முறைக்குழு

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உடனேயே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திருக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தி இருந்தால் காவிரி நீரைத் தேக்கி வைக்க கர்நாடகத்தில் கட்டப்பெற்ற அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகியவை கர்நாடக மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும். தமிழகத்தின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு கர்நாடக அணையிலிருந்து காவிரியில் நீரைத் திறந்துவிட ஒழுங்குமுறைக் குழு நடவடிக்கை எடுத்திருக்கும்.

MDMK appeals to PM to constitute Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கண்ட அமைப்புகளை உருவாக்காமல், தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்தது. இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசு உச்ச நீதிதமன்றத்தில் வழக்குத் தொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை மே 10, 2013 இல் உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, கர்நாடக அரசின் சார்பில் வாதாடியை வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஒரு வஞ்சகமான கருத்தை முன் வைத்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க காலதாமதம் ஆகலாம். அதுவரை மேற்பார்வைக்குழு ஒன்றை அமைக்கலாம். இடைக்கால ஏற்பாடாக அந்தக்குழு செயல்படட்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

மத்திய அரசு நடவடிக்கை

கர்நாடக மாநில அரசின் வழக்கறிஞர் நாரிமன் எடுத்து வைத்த உள்நோக்கம் நிறைந்த இந்த ஆலோசனையை எதிர்த்து வாதாட தமழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அன்று உச்ச நீதிமன்றத்திற்கு வரவில்லை. உச்ச நீதிமன்றமும் ஒரு தலைபட்சமாக கர்நாடகத்தின் வழக்கறிஞர் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு இடைக்கால ஏற்பாடாக மேற்பார்வைக்குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி மத்திய அரசு "தற்காலிக காவிரி நீர் இறுதித் தீர்ப்பு அமலாக்கத் திட்டம்" ஒன்றை மே 24, 2013 இல் அறிவித்தது.

தற்காலிக நடவடிக்கை

இந்தத் திட்டத்தின்படி காவிரி நீர் மேற்பார்வைக்குழு மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது. காவிரி நீர் மேற்பார்வைக்குழுவில் காவிரி பாசன மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களும் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களாக செயல்படுவர். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் இந்தக் குழுவின் உறுப்பினர் செயலராக இருப்பார். இக்குழுவின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதிகாரமில்லை

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் வரை இது முற்றிலும் தற்காலிக நடவடிக்கை என்று மத்திய அரசு கூறியது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழகம் வைத்தக் கோரிக்கையை செயல்படுத்த காவிரி மேற்பார்வைக் குழுவால் முடியவில்லை. ஏனெனில் இக்குழுவுக்கு எந்தவிதமான சட்டபூர்வமான அதிகாரமும் கிடையாது.

MDMK appeals to PM to constitute Cauvery Management Board

தமிழகத்திற்கு துரேகம்

கடந்த ஓராண்டு காலமாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

உடனே அமைக்க வேண்டும்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், தமிழகத்தின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டவும், சட்ட அங்கீகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+