மீண்டும் புழல் சிறை சென்றார் வைகோ.. எதற்குத் தெரியுமா?
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புழல் சிறையில் சந்தித்தார்.
சென்னை : குண்டர் தடுப்புச் சட்டம், வழக்குக்கு மேல் வழக்கு என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை வைகோ இன்று புழல் சிறையில் சந்தித்தார்.
மே17ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அனுமதியின் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றதால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, கடந்த 29-ஆம் தேதி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின்கீழ் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது, கடந்த 2016 ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடியது உள்ளிட்ட வழக்குகளில் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக இன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான திருமுருகன்காந்திக்கு இந்த வழக்கில் மட்டும் ஜாமின் கிடைத்துள்ளது.
எனினும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று புழல் சிறைக்கு சென்று திருமுருகன்காந்தியை நேரில் சந்தித்தார். அப்போது வழக்குகளைக் கண்டு மனம் அஞ்சாமல் இருக்கும் திருமுருகன்காந்திக்கு வைகோ வாழ்த்துகளை சொன்னதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications