விருதுநகரில் மதிமுக மாநாடு.... பிரம்மாண்டமான பந்தல்... ஜொலிக்கும் ப்ளக்ஸ் போர்டுகள்
விருதுநகர்: விருதுநகரில் நாளை நடைபெறும் ம.தி.மு.க. மாநில மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே ப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகரில் மதிமுக சார்பில்) நடைபெற இருக்கிற மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள். இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றி பேசுகிறார்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் உள்ள சூலக்கரையில் மதிமுக சார்பில் மாநாடு காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரையில் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டை முன்னிட்டு அப்பகுதியில் பிரமாண்டமான அளவில் நவீன உள் அலங்காரத்துடன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மதிமுக தொண்டர்கள் வேன், பஸ்கள் உள்ளிட்டவைகளில் வந்து குவிகிறார்கள்.
ஆடம்பரம் இல்லை
விருதுநகரில் நடைபெற உள்ள மாநாட்டில் சரித்திரத்தில் இடம் பெறுகிற வகையில் 2 லட்சம் பேர் வரையில் பங்கேற்க இருக்கின்றனர். எந்தவித ஆடம்பரம் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், இம்மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கண்காட்சி
இந்த மாநாட்டு வளாகத்தில் பெரியார் தொடர்பான படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்களவை தேர்தலை மையமாக வைத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
வைகோ சிறப்புரை
இந்த மாநாட்டிற்கு மதிமுக உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜெபராஜ் தலைமை வகிக்கிறார். அதேபோல், மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளில் பேச இருக்கிறார்கள். மாநாட்டின் நிறைவாக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றி பேசுகிறார்.
பிரம்மாண்ட பந்தல்
இதையொட்டி விருதுநகர் மாவட்ட எல்லை தொடங்கி, மாநாடு நடைபெற இருக்கிற இடம் வரையில் நான்கு வழிச்சாலையில் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், அலங்கார விளக்குகள, குழல் விளக்குகள் வைக்கப்பட்டு நகரமே விழாக்கோலத்துடன் உள்ளது.
பொன்மொழிகள்
ம.தி.மு.க. மாநில மாநாட்டில் பெரியார், அண்ணா பொன்மொழிகள், கருத்துக்கள் அடங்கிய வாசகங்களுடன் ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
குடிநீர் வசதி
இந்த மாநாட்டில் மருத்துவ அணி சார்பில் மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம், ஒவ்வொரு பகுதியிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
அறுசுவை உணவு
இந்த மாநாட்டுக்கு வருகிற அனைவருக்கும் விலையில்லாமல் உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்தல் முன்புறம் பல்வேறு மாவட்டங்களில் வரும் வாகனங்கள், கார் ஆகியவை நிறுத்துவதற்கு போதுமான வசதியும் செய்யப்பட்டுள்ளது என மதிமுகவினர் தெரிவித்தனர்.