நரேந்திர மோடி மாநாடு: ம.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பு குழு- வைகோ அறிக்கை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில், பா.ஜ.க- ம.தி.மு.க., கூட்டணி உறுதியாகியுள்ளது. அதனால், ம.தி.மு.க., தலைமை அலுவலகமான தாயகத்திற்கு, பா.ஜ.க தலைவர்கள், சமீபத்தில் சென்று அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைமையகமான, கமலாலயத்திற்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஞாயிறன்று சென்றார். அவருடன் துணை பொதுச்செயலர், மல்லை சத்யா, பொருளாளர் மாசிலாமணி, மாவட்டச் செயலர்கள் செங்குட்டுவன், ஜீவன், தேர்தல் பிரிவு செயலர், கழககுமார் உட்பட, பலர் சென்றனர்.
பாஜக அணியில் தே.மு.தி.க., பா.ம.க., இடம் பெறுவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், அடுத்த மாதம், 8ம் தேதி வண்டலூரில் மோடி பங்கேற்கும், பா.ஜ., பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், பா.ஜ. கதலைவர்களுடன், வைகோ முக்கிய ஆலோசனை நடத்தினார்.
வண்டலூரில் மோடி பங்கேற்கும் பாஜக மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழுவில், ம.தி.மு.க., சார்பில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணி செயலாளர் கழக குமார், மாவட்ட செயலாளர்கள், பாலவாக்கம் சோமு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர், பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றுவர் என்று வைகோ கூறியுள்ளார்.