பரபரப்பான சூழ்நிலையில் நாளை மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்…
சென்னை: மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நாளை கூடுகிறது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். பதவி சுகம் அனுபவித்தவர்கள் மட்டுமே இப்போது கட்சியில் இருந்து விலகி வருவதாக வைகோ கூறியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் காஞ்சிபுரம், சேலம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்கள் விலகியுள்ளனர். இதில் இருவர் திமுகவில் இணைந்துள்ளனர். எதிர்காலம் கருதி விலகுவதாக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கூறியுள்ளார்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் நாளை (19.09.2015 சனிக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற உள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பு நாளை (19.09.2015) மாலை 4.30 மணிக்கு சென்னை, தாயகத்தில் நடைபெறும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளர்.

வைகோ பேட்டி
இதனிடையே இன்று மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்துச்சென்றிருந்தார் வைகோ.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் மட்டுமே கட்சியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார். மதிமுக தலைவர்களால் உருவானதல்ல... தொண்டர்களால் உருவானதல்ல என்றும் கூறியுள்ளார். எம்.எல்.ஏ, எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் இப்போதும் பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர் என்றும் வைகோ கூறியுள்ளார். அப்போது கட்சியில் மல்லைசத்யாவும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications