கோவில்பட்டியில் ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு: மதிமுகவினர் 20 பேர் கைது
திமுக பொருளாளர் ஸ்டாலினை கண்டித்து கோவில்பட்டியில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி: கோவில்பட்டியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி (92), தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே நேற்று மாலை மதிமுக பொது செயலாளர் வைகோ கருனாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அங்கே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அவருடைய வாகனத்தை சூழ்ந்து கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆத்திரத்தில் இருந்த சில திமுக தொண்டர்கள் வைகோ கார் மீது கற்கள், செருப்புகளை வீசினர். அவர்களின் எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த வைகோ திரும்பிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வைகோ மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் எதிரே மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக பொருளாளர் ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து உருவபொம்மை எரித்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications