தேர்வில் தோல்வி: பெரம்பலூர் தனலட்சுமி மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த காரணத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் கீர்த்தனா(21). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜன் என்பவரின் மகளாவார்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ் நான்காமாண்டு படித்து வந்த இவர், ஏப்ரல் மாதம் நடைபெற்ற சர்ஜிக்கல் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.
தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த கீர்த்தனா ஞாயிறன்று கல்லூரி விடுதிக்கு திரும்பினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சக மாணவிகளுடன் உணவருந்திவிட்டு விடுதிக்குச் சென்ற கீர்த்தனா, திங்கள்கிழமை காலை விடுதியில் உள்ள படிப்பகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் சடலத்தைக் கண்ட சக மாணவிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.
இதுகுறித்து கீர்த்தனாவின் தோழி திருச்செங்கோடு அருகேயுள்ள ஆண்டிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரா. சிவசங்கரி (21) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.