வேந்தர் மூவிஸ் மதன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்.. 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வேந்தர் மூவிஸ் மதனை 7 நாள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: எஸ்.ஆர்.எம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 80 கோடி வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் மூவேந்தர் மூவிஸ் மதன். இவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலைக் கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ.80 கோடி வசூலித்து மோசடி செய்து தலைமறைவானார் மதன். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார். மேலும், மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவது தொடர்பாகவும் வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, தொடர்ந்து மதனை போலீசார் தேடி வந்தனர். மேலும், மதனை பிடிக்க போலீசாருக்கு ஐகோர்ட்டும் கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இதனையடுத்து, இன்று காலை சைதாப்பேட்டை கோர்ட்டில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.