மேகதாது அணை: சட்டசபையில் திமுக, காங். கவன ஈர்ப்பு தீர்மானம்- விவாதம் நடத்த கோரி வெளிநடப்பு
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் உடன் சென்று பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்ம் என்றும் துரைமுருகன் வலியுறுத்தினார். இது தொடர்பாக துரைமுருகன் பேசுவதற்கு தொடர்ந்து சபநாயகர் வாய்ப்பு அளிக்காததை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று அவை கூடியதும் கேள்வி நேரத்தின் போது மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுமா என திண்டிவனம் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார். தேவைப்பட்டால் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் 700 சதுர அடியில் 6 தளம் கொண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 24 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.

திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
கேள்வி நேரம் முடிந்த உடன் நேரமில்லா நேரத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் மேகதாது அணைப்பிரச்சினை தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

துரைமுருகன் பேச்சு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தினார். அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் உடன் சென்று முதல்வர் , பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
எதிர்கட்சியினர் கொண்டு வந்த சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டப்போராட்டம் நடத்தி அணை கட்டப்படுவதை தடுப்போம் என்றார்.

சபாநாயகர் மறுப்பு
அதே நேரத்தில் மேகதாது அணை விவகாரத்தை இன்று விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். ஆனால் விசயத்தின் தீவிரத்தன்மையை கவனத்தில் கொண்டு சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு தனி தீர்மானம் தேவையில்லை என்று சபாநாயகர் கூறவே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தனி தீர்மானம் அவசியம்
வெளிநடப்புக்குப் பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதனை லேசாக ஒதுக்கிவிட முடியாது. கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஓரணியில் கட்சிகள்
கட்சிகள் பல இருந்தாலும் நாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். கர்நாடகாவில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஓரணியில் செயல்படுகின்றன. நாமும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி நம் தரப்பு முடிவை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.

ஆளுங்கட்சி உறுப்பினராக சபாநாயகர்
சட்டசபையில் சபாநாயகர் தனபால் ஆளுங்கட்சி உறுப்பினர் போல செயல்படுகிறார். எதிர்கட்சியினர் பேசுவதற்கு நேரம் கொடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications