தஞ்சையில் கரிகாலன் நினைவு மண்டபம்: சென்னையில் இருந்து திறந்து வைத்த ஜெ
சென்னை: தஞ்சையில் கட்டப்பட்டுள்ள கரிகாலன் நினைவு மண்டபத்தை, நேற்று சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சிகள் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (12ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மத்திய கருவிமய மைய கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 27 கோடியே 88 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை திறந்து வைத்து, 573 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதேபோல், கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனின் பெருமைகளை என்றென்றும் நினைவில் வைத்து போற்றி கௌரவிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மன்னர் கரிகால் சோழன் நினைவு மணிமண்டபத்தையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருச்சி மாநகராட்சியில், 221 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தையும் காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். மேலும், 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள்; சென்னை மாநகராட்சி பகுதியில் 56 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், சுரங்கப் பாதை மற்றும் கலை அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்து, 28 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களைத் துவக்கி, 13 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஊத்துக்குளி வருவாய் வட்டத்தை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இலுப்பூர் வருவாய் கோட்டம் மற்றும் சென்னை, வேலூர், கரூர், திருவள்ளூர், திருப்பூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 22 வருவாய் வட்டங்களையும் தொடங்கி வைத்தார்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.