2வது கோரிக்கையும் நிறைவேறினால் ஈபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை.. மாஃபா பாண்டியராஜன் தகவல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், 2வது கோரிக்கையையும் நிறைவேற்றினால் அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ஈபிஎஸ் அணியினர், தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது போன்று எங்களது இரண்டாவது கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டால் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது, சசிகலா குடும்பத்தைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும், தங்களது 2வது கோரிக்கையும் நிறைவேறும் பட்சத்தில் அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் கட்டமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைக் கொச்சைப்படுத்த டிடிவி தினகரனுக்கு உரிமையில்லை என்று கூறிய பாண்டியராஜன், சொந்தப் பிரச்சனைகள் குறித்துப் பேச டெல்லி சென்று மோடியைச் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.