தீபாவளிக்கு வெளியாகிறது மெர்சல்... தடையில்லா சான்று வழங்கியது விலங்குகள் நல வாரியம்
மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் கிடைக்குமா என்பது தொடர்பான அவசர ஆலோசனை நடைபெறுகிறது.
Recommended Video
சென்னை: மெர்சல் படத்துக்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'மெர்சல்'. இந்த படத்தை ரூ.140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. அட்லி இயக்கி உள்ளார்.
இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து உள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே மெர்சல் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் அறிவிப்பு
பின்னர் கடந்த 6-ஆம் தேதி அந்தத் தலைப்பை பயன்படுத்தத் தடை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேளிக்கை வரி பிரச்சினையும் தீர்க்கப்பட்டு தீபாவளிக்கு மெர்சல் படம் திரைக்கு வரும் என்று பட அதிபர்கள் சங்கம் அறிவித்தது.
விலங்குகள் நல வாரியம்
இந்த படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்காததால் தீபாவளிக்கு இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மெர்சல் படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா கிராபிக்ஸ் என கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரம் ஏதும் படக்குழுவினரால் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாம்பு ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டது. இதனால் அந்த வாரியம் தடையில்லா சான்று வழங்கவில்லை.
காட்சிகளை நீக்க ஒப்புதல்
படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா, கிராபிக்ஸ் என்பதற்கான ஆதாரங்களை படக்குழுவினர் இன்று தாக்கல் செய்தனர். பின்னர் மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்க ஒப்புக் கொண்டது.
தீபாவளிக்கு ரிலீஸாகிறது மெர்சல்
இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை இணையதளத்தில் வெளியாகும். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.