ச்சும்மா ஜில்லுன்னு கீதுபா மெட்ராஸ்.. விடிய விடிய மழை.. இன்னும் 2 நாள் கொட்டுமாம்!
சென்னை: சென்னையில் நேற்று பிற்பகலில் இருந்து விட்டு விட்டு பெய்த மழை நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டது. குண்டும் குழியுமான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த வாரம் வங்கக் கடலின் மத்திய மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது.
சென்னையில் நேற்று மதியத்துக்கு பிறகு, பரவலாக மழை பெய்தது. இது மாலை வரை நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் புரண்டோடியது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் வலுவிழந்து வளி மண்டல காற்று சுழற்சியாக உருமாறியுள்ளது.

இது ஆந்திராவை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சில இடங்களில் காலையில் வெயிலும் மதியத்திற்கு மேல் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். மாலையில் மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை சாரலாக பெய்யத்தொடங்கி நள்ளிரவில் தீவிரமடைந்தது. அதிகாலைவரை பெய்த மழையால் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலை ஓரங்களில் தேங்கிய நீரினால் காலை நேரத்தில் வேலைக்கும், பள்ளிக்கும் செல்பவர்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் வலுவிழந்து வளி மண்டல காற்று சுழற்சியாக மாறியுள்ளது. இது ஆந்திராவை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என்றும், மாலையில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications