எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கு தடையா? - ஹைகோர்ட்டில் அரசு முறையீடு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு விளக்கத்தை கேட்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்த விவகாரத்தில் அரசு விளக்கத்தை கேட்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், அரசு விழாக்களில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதாகவும், இதுதொடர்பாக, தமிழக காவல்துறை இயக்குநருக்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக் குழந்தைகளை கால்நடைகளை போல் நடத்தக்கூடாது என கண்டிப்புடன் கூறினர். பள்ளி வளாகத்துக்கு வெளியே மாணவர்களை அழைத்துச் செல்வது குறித்து விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக, தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்த விவகாரத்தில் அரசு விளக்கத்தை கேட்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் முறையீட்டை ஏற்று வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைப்பது சட்டவிரோதமானது என சமூக ஆர்வலர் நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.